சென்னை: உத்திரமேரூர் அருகே பெரியார் சிலையை உடைத்த பாமக நிர்வாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். உத்திரமேரூர் அடுத்த கலியப்பேட்டை கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை, கடந்த 24ம் தேதி அதிகாலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேதமடைந்த பெரியாரின் சிலையை சீரமைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பெரியார் சிலையை உடைத்தது கலியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாமக நிர்வாகி தாமோதரன் (36) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் கலெக்டர் தாமோதரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், தாமோதரனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.